May 17, 2012

சொற்களின் நீரூற்றும் நிறமற்றப் பச்சோந்தியும்

(உயிர்மொழி ஏப்ரல் இதழில் வெளியான கவிதை)

இருளென்றும் வெளிச்சமென்றும்
பிரித்தறிய முடியாப் பொழுதுகளாலான
அடர்கானகத்தின் நடுவே
மலையடிவாரத்தில் தான் தேடிவந்த
சொற்களின் நீரூற்றைக்
கண்டுபிடித்தான் மந்திரன்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்
அதனுட் புக முற்பட்டவனைத்
தடுத்து நிறுத்திய மாயக்குரல்
முன்புதிரைத் தீர்த்தபின்னரே
நீரூற்றுக்குள் நுழையமுடியுமென எடுத்துரைக்க
மந்திரனின் கண்முன் விரிந்தது
அரூபத்திரையில் பொன்னிற எண்களினாலான புதிர்
பின் தொடர்ந்த தனிமையைப் பச்சோந்தி என உருமாற்றி
தோளின் மீது இருத்தியவனாக புதிருக்குள் நுழைந்தான்
பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான எண்களும்
ஆயிரம் கட்டங்களும் கொண்ட புதிர்
காலத்தோடு தன்னிருப்பை மாற்றிக் கொண்டேயிருக்க
காலவெளியில் மந்திரனும் சுழன்றபடியே
எண்களைக் கட்டங்களுக்குள் அடக்கவியலாது
மூச்சுத்திணறிக் கொண்டிருந்தான்
புதிருக்குள் தொலைந்து போயிருந்த
பச்சோந்தியின் உடம்பிலிருந்து நிறங்கள் உதிரலாயின
வனமெங்கும் இருளப்பிய கிரகணப் பொழுதில்
புதிரத்தனையும் பொருத்தி முடித்ததாக
நம்பியவன் கண்கள் வலது மூலையின் நிரப்பப்படாத
இரு கட்டங்களில் இடறிவிழுந்தன
பூர்ணசமர்ப்பணமாய்
வாளெடுத்து தன் கழுத்தை
வெட்டியெறிகையில்
துண்டாகிய தலை பூஜ்யம்
தனியே கிடந்த உடல் ஒன்று
தீர்ந்துபோனது புதிர்
நிறமற்ற பச்சோந்தியின்
கண்ணீர்த்துளிகள்
காற்றில் விசித்தபடி
தனித்தலைகின்றன

April 30, 2012

உதிரிப்பூக்கள் - 11

நான் வேலை பார்க்கும் கல்லூரிக்குப் பின்புறம் ஒரு பெரிய பொட்டல்காடு இருக்கிறது. எந்நேரம் பார்த்தாலும் அங்கே ஏதாவது ஒரு குரூப் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும். டவுசர் போட்ட சின்னப்பையன் முதல் கைலி கட்டிய பெரிய மனிதன் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் இருப்பார்கள். மதிய நேரத்து மொட்டை வெயிலோ மழையோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. எந்நேரமும் கிரிக்கெட்தான். எந்தக் கவலையும் இன்றி நாமும் அவர்களைப் போல விளையாட முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கும்.

இந்தியாவில் இன்று ஜாதி மற்றும் கரப்பான்பூச்சிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் பரவலாக விரவிக் கிடக்கிறது. வெளியூர் மற்றும் வெளிமாநிலப் பயணங்களின் போதும் தெருவில் எனக்கு அதிகம் பார்க்கக் கிடைக்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். குறிப்பாக பி எல்லின் வருகை கிரிக்கெட்டை விளையாட்டு என்பதிலிருந்து வேறொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கிறது. சச்சினைத் தங்கள் கடவுள் எனக் கொண்டாடிய மக்களை, அவரை வீழ்த்தி விட்டால் போதும் கண்டிப்பாக நாம் ஜெயித்து விடலாம், எனப் பிரார்த்திக்க வைக்கும் நிலை இன்றைக்கு வந்தாகி விட்டது.

ரு மட்டையைக் கொண்டு பந்தை அடிக்க வேண்டும் என்பதாக எனக்கு கிரிக்கெட் அறிமுகம் ஆனபோது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அடுப்பெரிக்க வைத்து இருக்கும் விறகும் பிளாஸ்டிக் பந்தும்தான் நான் முதன்முதலில் கிரிக்கெட் ஆடிய உபகரணங்கள். யார் அதிகம் பேட் செய்வது என்கிற தகராறில் விறகு பேட் வாளாய் மாறி சண்டை போட்டு கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டதுதான் எனது முதல் விழுப்புண். ஆறாவது படிக்கும் காலத்தில் சுப்பரமணியபுரம் ஏரியாவுக்கு மாறிய பிறகுதான் நான் சீரியசாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது.

பாலகுருகுலம் ஸ்கூல் பக்கத்தில் இருந்து ரைஸ்மில் கிரவுண்ட் தான் எங்கள் பிளேகிரவுண்ட். எதிர் வீட்டு ராஜசேகர் அண்ணனின் டீமில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். என்னுடைய பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ரொம்பக் கேவலமாக இருக்கும் பேட்டிங் கொஞ்சம் கேவலமாக இருக்கும் என்பதால் ஏழாவது அல்லது எட்டாவதாக இறக்கி விடுவார்கள். பெரும்பாலும் கீப்பருக்குப் பின்னால் நின்று பந்து பொறுக்கி போடுவதுதான் என்னுடைய முக்கியமான வேலை.

அன்றைக்கு பதினைந்து ஓவர்கள் கொண்டதொரு பால் மேட்ச். எங்கள் அணிதான் பேட்டிங். முதல் நான்கு ஓவருக்குள்ளேயே ஆறு விக்கெட் போயிந்தி. ஏழாவதாக நான் இறங்குகிறேன். எதிர் முனையில் இருக்கும் குட்டை குமார் நன்றாக விளையாடக் கூடியவன் என்பதால் எப்படியாவது அவுட் ஆகாமல் மட்டும் இருடா என்று என்னிடம் வந்து சொல்லிப் போனான். அன்றைக்குப் பார்த்து எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை சன்னதம் வந்தாற்போல ஆடி விட்டேன்.

போடுகிற பந்தை எல்லாம் காலிலேயே குத்திக் கொண்டிருந்தது வசதியாகப் போக சிக்சும் ஃபோருமாகப் பறந்தது. எங்கள் ஆட்டம் முடிந்த போது நான் எண்பது ரன்னும் குமார் அறுபதும் அடித்து இருந்தோம். அபார வெற்றி. மக்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அன்றிலிருந்து நானும் குட்டை குமாரும் அணியின் முக்கியமான இணையாக மாறி விட்டோம். எல்லாம் நல்ல படியாகப் போய்க் கொண்டிருந்தது, நான் குட்டை குமாரின் தங்கைக்கு லவ் லெட்டர் கொடுக்கும் வரை.

யில்வே காலனிக்கு வந்த பிறகு வேறொரு டீம். ஆனால் இங்கு நான்தான் கேப்டன். ரப்பர் பந்திலிருந்து பீஸ்பாலுக்கு நாங்கள் புரமோஷன் வாங்கியது இந்தக் காலத்தில்தான். காலனியின் வீதிகளில் விளையாட தனித்திறமை வேண்டும். கடுமையான விதிகளுக்கு உட்பட்டு களம் இறங்குவோம். வாதாமரம் தான் ஸ்டம்ப். ஓட்டின் மீது அடித்தால் அவுட். வேலி கட்டிய வீடுகளுக்குள் பந்து நேராய்ப் போய் விழுந்தாலும் அவுட். அதுவும் பந்து போய் விழும் வீடு துரைசானிகளின் வீடாய் இருந்தால் பந்தைத் திருப்பி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். நிறைய பேர் பந்தை அறுத்துத்தான் திருப்பித் தருவார்கள். திட்டிக் கொண்டே திரும்பி வருவோம்.

கல்லூரியில் சேர்ந்தபின்பாக கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது. இன்றைக்கு கல்லூரி ஆண்டு விழாக்களில் எப்போதாவது மாணவர் ஆசிரியர் போட்டி வைத்தால் மட்டும் கலந்து கொள்வது என்கிற நிலைக்கு விளையாட்டு என்பது குறைந்து போய் விட்டது. இருந்தாலும் பால்யத்தின் பல இனிமையான நினைவுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சின்ன வயது நினைவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் தவிர்த்து சொல்வதற்கும் எங்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தன.

ள்ளிக்கூடத்தில் பி டி பீரியட் என்று தனியாக ஒரு ஹவர் இருக்கும். அந்த நேரத்தில் விளையாடுவதற்கு என்று எங்கள் பள்ளிக்கென ஒரு ஸ்பெஷல் விளையாட்டு இருந்தது. மொத்த வகுப்பையும் இரண்டாகப் பிரித்து வரிசையாக ஆளுக்கொரு எண் கொடுத்து விடுவார்கள். இப்போது இரண்டு அணியிலும் தலா முப்பது எண்களைத் தாங்கிக் கொண்டு முப்பது பேர் இருப்போம். இரண்டு அணிக்கும் நடுவே ஒரு வட்டம் வரைந்து உள்ளுக்குள் ஒரு கர்ச்சீப்பை வைத்து விடுவார்கள். ஆட்டதுக்கு களம் ரெடி.

இப்போது நடுவராக இருக்கும் பி டி மாஸ்டர் ஒரு எண்ணை உரத்துச் சொல்வார். அந்த எண்ணுக்குரிய நபர்கள் இருவரும் வட்டதுக்கு அருகே வந்து விடுவார்கள். மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கள் அணிக்குத் திரும்ப வேண்டும். அப்படி ஒருவர் எடுத்து வந்து விட்டால் அந்த அணிக்கு ஒரு பாயிண்ட். எடுத்தவர் அணியின் எல்லைக் கோட்டைத் தொடுவதற்குள் மற்றவர் இவரைத் தொட்டுவிட்டால் எதிரணிக்கு ஒரு பாயிண்ட். இப்படியாகப் போகும் ஆட்டத்தில் கிளுகிளுப்பே அழைக்கப்படும் எண்களுக்கு உரிய மக்கள் எதிர்பாலினத்தவர்களாக இருப்பதில்தான் இருக்கும். வாரம் பூராவும் இந்த ஒற்றை ஹவருக்காக காத்திருந்து விளையாடுவோம்.

ன்னுடைய நெருங்கிய சினேகிதிகள் எல்லாரும் எனக்கு சுப்பிரமணியபுரம் வந்த பிறகு கிடைத்தவர்கள். அங்கே இருந்த காலகட்டத்தில் நான் ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் பெண்களோடுதான் அதிகமாக விளையாடுவேன். தில்லி தில்லி பொம்மக்கா, கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், வளையல் ஜோடி சேர்த்து ஆடுவது, சொட்டாங்கல், பிள்ளைப்பந்து, நாடு பிடிச்சு ஆடுவது என்று வித விதமான விளையாட்டுகளில் நேரம் போவதே தெரியாது. பசங்களோடு சேர்ந்து கொள்வதில்லை என்று பையன்கள் கண்ட மேனிக்கு வைவார்கள். இதை எல்லாம் பார்த்தால் பிழைப்பு நடக்குமா என்று போய்க் கொண்டே இருப்பேன்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஏரியாப் பையன்களின் மத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டுக்களில் முக்கியமானது ரவுண்டு காத்து. ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களில் எல்லாம் காற்றைப் பிடுங்கி விட்டுக் கொண்டே போவதுதான் விளையாட்டு. ஆட்டம் இரண்டு நாட்களுக்கு இரண்டு அணிகளுகு இடையே நடக்கும். முதல் நாள் டாசில் வென்ற அணி காத்துப் பிடுங்கப் போகும்போது எதிரணியில் இருந்து கணக்கெடுக்க ஒரு அம்பயரும் கூடவே போக வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த அணி வேட்டைக்குப் போகும். முடிவில் அதிகமான சைக்கிள் டயர்களைப் பதம் பார்த்தவர்களே வெற்றி பெற்றவர்கள். தோற்ற அணி மற்றவர்களுக்கு வடையும் டீயும் வாங்கித்தர வேண்டும். இன்னொரு முக்கியமான ஆட்டம் ரவுண்டு கண்ணாமூச்சி. ஏரியாவில் இருக்கும் பனிரெண்டு தெருக்களில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். தேடி வருபவன் எல்லாரையும் கண்டுபிடிக்க சில சமயங்களில் ஏழு எட்டு மணி நேரங்கள் ஆகும்.

விளையாட்டுகள் எல்லாவற்றுக்குமே சீசன் உண்டு. ஒரு விளையாட்டு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஓடும். பிறகு வேறொரு விளையாட்டு ஆரம்பித்து விடும். பெரும்பாலும் முழுப்பரிட்சை விடுமுறையில் பம்பர சீசனில் தான் எல்லாம் ஆரம்பிக்கும். அபிட்டு, அங்கோஷு, சாட்டை மேல சாட்ட வச்சு சொடக்சைன் என்பதான சத்தங்கள் தெருவெங்கும் நிரம்பி வழியும். பம்பரத்தைப் பொறுத்தவரை ஆக்கர்பார்தான் சரியான ஆட்டம். பத்து ரவுண்டு வரை உருட்டி இறுதியாகச் சிக்கிய பம்பரத்தை சாக்கடையில் ஊறப்போட்டு கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பதில் இருக்கும் சுகமே அலாதி.

பம்பரம் முடிந்து அடுத்ததாக கோலிகுண்டு சீசன் தொடங்கும். அதன் பின்பாக தீப்பெட்டி அட்டை, சிகரெட் அட்டை, லாட்டரி சீட்டு என்று விதம் விதமான ஆட்ட சீசன்கள் வந்தப்டியே இருக்கும். தெருதெருவாக சுற்றி ஒரு குப்பைத் தொட்டி விடாமல் பொறுக்கி தீப்பெட்டி அட்டைகளும் சிகரெட் அட்டைகளும் சேகரிப்பதில் நண்பர்களுக்கு இடையே அடிதடி கூட நடக்கும். அதிலும் வெளிநாட்டு சிகரட் அட்டைகளுக்குக் கூடுதல் மவுசு வேறு. அதன் மதிப்பு மட்டும் கோடிகளில் இருக்கும். உள்ளூர் சிசர்ஸின் மதிப்பு வெறும் ஐம்பதுதான். சேகரித்த அட்டைகளைக் கொண்டு சில்லாக்கில் செதுக்கி ஆடுவது, பூவா தலையா ஆடுவது என்று ஆட்டங்கள் களைகட்டும். நடுவே உலக்கோப்பை ஃபுட்பால் அட்டை, கிரிக்கெட் அட்டை, ரெஸ்லிங் அட்டை என்று வந்தால் அதற்கெனத் தனி சீசன்.

த்தனை விளையாட்டுகள். இதை எல்லாம் நாம் ஆடி இருக்கிறோம் இப்படி ஒரு வாழ்க்கை வந்து இருக்கிறோம் என்று நினைக்கும்போதே உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்றைக்குத் தெருக்களில் இவற்றில் எதையும் பார்க்க முடியவில்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. ஹேண்ட் கிரிக்கெட்டிலும் வீடியோ கேம்சிலும் உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மொட்டை மாடி நிலவில் அமர்ந்து காலாட்டுமணி கையாட்டுமணி ஒத்த முட்டையத் தின்னுட்டு ஊள முட்டையக் கொண்டுவா என்பதெல்லாம் வெறும் கதையாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கையில் பெருமூச்சு விடுவதைத் தாண்டி நாம் வேறென்ன செய்து விட முடியும்?

April 14, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு பின்நவீனத்துவப் பார்வை

ரமணிசந்திரன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். தமிழில் இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் வாசித்த வரையில், அவரிடம் இருப்பது ஒரே கதைதான். காதலாகிக் கசிந்துருகும் ஒரு ஆணும் பெண்ணும். பெரும்பாலும் அந்தப் பெண் ஏழையாகவும் ஆண் பணக்காரனாகவும் இருப்பார்கள். திடீரென ஆணுக்குப் பெண் மீது சந்தேகம் வந்து பிரிவார்கள். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திக்கும்போது பெண் ஆணிடம் வேலை செய்திட வேண்டிய சூழல் நேரும். பிறகு அவனுடைய அண்மையை விட்டு விலகிட முடியாமல் அவள் தன்னைத் தொலைப்பதும் பிரச்சினைகள் தீர்ந்து பெரிய மனதோடு அவன் அவளை ஏற்றுக் கொள்வதும் எனக் கதை முடியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒற்றைக் கதையோடு தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்திடக் களம் இறங்கி இருக்கும் எம்.ராஜேஷின் மூன்றாவது படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.

பொறுப்பே இல்லாத ஒரு ஆண். வீட்டில் வம்பு வளர்ப்பதும் தண்ணி அடிப்பதும் பெண்கள் பின்னால் சுற்றுவதும் அன்றி வேறேதும் தெரியாதவன். அவனைக் கூட இருந்து வழிநடத்தும் நண்பன். தனது மகன் தப்பே செய்தாலும் கூடவே இருந்து ஊக்கம் தரும் அம்மா. எதேச்சையாகப் பார்க்கும் பெண்ணோடு காதல். அவளுடைய அப்பா கண்டிப்பாக காதலுக்கு எதிரியாக இருப்பார். தொடர்ச்சியான வழிதல் மற்றும் மோதலுக்குப் பிறகு உறுதியாகும் காதல். எல்லாம் நல்லபடியாக முடிந்தது எனும் நிலையில் நண்பனை முன்னிட்டு ஒரு பிரிவு. கடைசியில் காதலர்கள் ஒன்றுசேர சுபம். கதை என்கிற விசயத்தைப் பற்றி கவலையே படாது கொண்டாட்டத்தை நம்பிக் களம் இறங்கி இருக்குறார் இயக்குனர்.



என்றாலும் மூன்றாம் காலனிய ஆதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான உதிரிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு சில பல புனித பிம்பங்களை உடைத்தெறிவதோடு நம்பப்பட்ட உண்மைகளையும் சொல்லப்பட்ட நியாயங்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதாலும் குடி உடல்நலத்துக்குக் கேடு என்கிற வரிகளைச் சேர்த்துக் கொண்டு படம் முழுவதும் குடியைப் பிரதானப்படுத்தி இந்திய சென்சார் விதிகளை எள்ளி நகையாடுவதோடு எல்லாவற்றையும் பகடி செய்யும் நோக்குடன் மையத்தைச் சிதறடிக்கும் பின்நவீனத்துவப் போக்குகள் படம் முழுவதும் நிரம்பி வழிகின்றன என்கிற வகையிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி மிக முக்கியமான படமாக மாறுகிறது.

தமிழ் சினிமாவின் நாயகன் என்கிற கற்பிக்கப்பட்ட உண்மையின் பேருருவை ஒன்றுமில்லாததாக கலைத்துப் போட்டு உடன் வரும் நண்பனை முன்னிறுத்திப் புதியதொரு சகாப்தம் படைக்கிறார்கள். எதிலும் நிலையில்லாதவனாக யாராலும் நம்ப முடியாதவனாக நாயகனுடைய பாத்திரம் இருப்பது பின்காலனிய காலகட்டத்தின் மறுக்கவியலாக் கூறுகளைப் பிரதிபலிக்கிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர். காதல் சோகம் பாசம் கோபம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முகம் கொண்டு நிற்பதன் மூலமாக புதுவிதமான நடிப்பு முறையையும் செய்து பார்த்திருக்கிறார்கள் எனும்போது இயக்குனரின் பரீட்சார்த்த ஆர்வங்களை நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. மோந்து பார்த்தாலே மட்டையாயிடுவாண்டா என்கிற வாய்மொழி வழக்காடலை முதன்முறையாக காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனரின் தைரியம் அசாத்தியமானதும் கூட.

பிரதிக்கு உள்ளேயே பிரதியைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு முக்கியமான போக்கு. நாயகன், நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானியைப் பார்க்கும் முதல் தடவையிலேயே, பித்துப் பிடித்தவன் ஆகிறான். ஆனால் நாயகியைப் பெண் பார்க்க வரும் மற்றொரு பாத்திரத்தின் மூலமாக நீ சிரிச்சா கேவலமா இருக்கு நீ போட்டிருக்க டிரஸ் பச்சக் கலரு சிங்குச்சா ஆக மொத்தம் நீ ஆண்ட்டி மாதிரி இருக்க என்று நேரடியான விமர்சனங்களை முன்வைக்கிறார் அல்லது தன் மனதில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தவும் செய்கிறார் இயக்குனர். ஆக ஒரு வகையில் இவ்வளவுதான் உன் தேர்வா என்று இந்த இடத்தில் நாயகனைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்.

சந்தானத்தின் பாத்திரம் இந்தப்படத்தின் உச்சபட்சக் கொண்டாட்டம். தமிழ் சினிமாவின் நண்பனை நேரடியாகப் பகடி செய்கிறதன் மூலம் இதுநாள் வரை சொல்லப்பட்ட நண்பர்களின் நியாயங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பாத்திரம். தனது காதலியை அனுப்பி நண்பனின் காதலைக் கூறுபோடும் நண்பனின் குரூரத்தை இதுவரைக்கும் யாரும் தமிழில் சொன்னதில்லை என்றே சொல்லலாம். இறுதிக்காட்சியில் ஹன்சிகா திருமணத்தில் உதயநிதி ஆங்கிலத்தில் பொளந்துகட்ட அதை சந்தானம் மொழிபெயர்ப்பதும் பிரசங்கிப்பதும் வாழ்க்கை என்பதும் இது மாதிரியான எழுப்புதல் கூட்டங்களுக்கு ஒப்பானதுதான் எனச் சொல்லும் மிகக் கூர்மையான அங்கதம். ஆனாலும் படம் முழுதும் சந்தானம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தைப் பிரதி செய்ய முர்பட்டிருக்கிறார் என்பதைச் சின்னதொரு வருத்தத்தோடு இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

எப்போதும் தனது இசையை தானே மீண்டும் நகல் எடுக்கும் புனித இசைப்போராளி ஹாரிஸ் இந்தப் படத்திலும் தனது திருப்பணியை தெளிவாகச் செய்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு பின்னணி இசையைக் கேட்டால் அப்படியே கஜினியில் இருந்து உருவியது தெளிவாகப் புரியும். அதே போல மொத்தத் தியேட்டரையும் நடனமாட வைக்கும் - அத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள் - வேணாம் மச்சான் வேணாம் பாடலை ஒரு படி மேலே போய் தேவா வடிவேலும் இணையின் வாடி பொட்டப்புள்ள வெளியே பாடலில் இருந்து உருவியதின் மூலம் மாறி வரும் காலப்போக்குக்குத் தகுந்தாற்போல தானும் மறக்கூடியவன் என்பதை அழகாகப் பதிவு செய்கிறார் ஹாரிஸ்.

அப்படியானால் இந்தப்படத்தின் ஆகப்பெரிய பிரச்சினை தான் என்ன? இயக்குனரின் மனம் ஆண்வயப்பட்டதாக இருக்கிறது. அது நாயகனின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துகிறது. அவன் எத்தனை மோசமானவனாக வெட்டியான ஆளாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மறுதலிப்பும் இன்றி அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது. அழகான பெண்கள் மட்டுமே சாலையில் நடமாட வேண்டும் என்பதிலும் புற அழகே காதலை முடிவு செய்கிறது என்பதிலும் நாயகியைக் கட்டாயப்படுத்தி அவள் அன்பைப் பெற்றாலும் ஆணைப் பொறுத்தவரை எதுவும் சரிதான் என்பதிலும் தென்படுவதுஆண் என்னும் அகங்காரத்தின் உச்சம். இருபது வருடம் பேசாமல் இருந்த தன் கணவன் ஒற்றை வார்த்தை பேசியவுடன் இத்தனை வருடம் ஆதரவாக இருந்த பையனை நாயகனின் அம்மா வைவதும் கூட இயக்குனரின் ஆணாதிக்க மனத்தின் வெளிப்பாடே. இத்தனைச் சிக்கல்களை முன்வைத்து பார்க்கும்போது..

ஏய் ஏய் நிறுத்து.. எதுக்கு இவ்ளோ மெனக்கெடுற? படம் நல்லா இருக்கா இல்லையா? சூப்பரா இருக்கு தலைவா. ஜாலியா போய் கொண்டாடிட்டு ஜாலியா வரலாம். அவ்ளோதான. அப்புறம் எதுக்கு இப்படி ஜல்லியடிக்குற. போ.. போய் பொழப்பப் பாரு. அட.. இப்பப் பார்த்தீங்கன்னா.. விமர்சனத்துக்கு நடுவுல நீங்களும் எழுதுறவரும் பேசிக்கிறீங்க பாருங்க. இது கூட பின்நவீனத்துவக் கூறுதான். அதாவது.. கீழைத்தேய மரபுல என்ன சொல்றாங்கன்னா.. டேய்.. அடிவாங்காம ஓடிப் போயிரு, இத்தோட முடிச்சுக்குவோம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - கொண்டாட்டம்

April 9, 2012

உதிரிப்பூக்கள் - 10

சின்னப் பிள்ளையாய் இருந்த காலத்தில் இருந்தே ஆசிரியர் பணி மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு. அதற்குக் காரணம் இந்திரா அம்மா. என் அம்மாவின் உடன்பிறந்த தங்கை. தமிழ்ப் பேராசிரியை. விளாங்குடியில் ஒரு யூனியன் ஸ்கூலில் பணி. இருபத்தைந்து வருடங்கள் வேலை பார்த்த பிறகு சமீபமாகத்தான் ஓய்வு பெற்றார்.

வீட்டுக்கு வரும் மாணவர்கள் இந்திரா அம்மாவுக்குத் தரும் மரியாதையும் ஆசிரியர் பணியின் மீது அம்மாவுக்கு இருந்த பெருமையும் என்னையும் பற்றிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. பொறியியல் படிப்பில் சேர்ந்த போதே எனது முடிவு தெளிவாக இருந்தது. படிப்பு முடிந்தவுடன் நான் ஆசிரியராகப் போகிறேன்.

இன்றைக்கு நான் விரும்பிய வேலையை முழுமனதாகச் செய்து வரும் திருப்தி எனக்கு இருக்கிறது. என்னுடைய ஆசிரியர்கள் என்னிடம் எப்படி இருக்க வேண்டும் என நான் விரும்பினேனோ, அது மாதிரியான ஒரு ஆசிரியராகவே இருக்க முயற்சிக்கிறேன். பாடங்களைக் காட்டிலும் அதனை நடத்தும் ஆசிரியரைப் பிடித்து விட்டாலே போதும், மாணவர்கள் எளிதில் படித்து விடுகிறார்கள் என்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அத்தோடு , படிப்பு என்பதைத் தாண்டி, ஒரு மாணவனை நல்ல மனிதனாக உருவாக்குவதும் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதும் ஆசிரியர்களே என்பதையும் தீவிரமாக நம்புகிறேன்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் கிடையாது. பிடிக்கும் பிடிக்காது அவ்வளவே. ஏதேனும் ஒரு விசயம் பிடித்துப் போய்விட்டால் வாழ்வில் கடைசி வரைக்கும் மறக்க முடியாதவர்களாக அவர்கள் ஆகி விடுவார்கள். அது மாதிரியான நிறைய மனிதர்கள் என் வாழ்வில் உண்டு.

ன்னுடைய மொத்த பள்ளிப்படிப்பும் ஜீவாநகரில் இருக்கும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில்தான் முடிந்தது. நான் எல் கே ஜி சேர்ந்த போது அங்கே ஆசிரியராக சேர்ந்தவர் குருராஜ் சார். +2 படித்து முடிக்கும்வரை எனக்கு பள்ளியில் நல்லதொரு ஆசானாகவும் நண்பராகவும் இருந்தவர்.

நல்ல படிய வாரிய சுருட்டை முடி. பெரும்பாலும் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். முகத்தில் எப்போதும் தொலைந்து போகாத சிரிப்பு. அத்தனைப் பெற்றோரிடமும் தன்மையாகப் பழகக் கூடியவர். இதெல்லாம்தான் குருராஜ் சாருக்கான அடையாளங்கள். மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றிக் குறை சொல்லும்போதெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனிதர் என்பதால் எங்கள் எல்லாருக்குமே சாரை ரொம்பப் பிடிக்கும்.

எந்தப் பிரச்சினை என்றாலும் தைரியமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய நல்ல மனிதர் என்றாலும் எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரு விசயமும் இருந்தது. அது அவருடைய தீவிரமான கடவுள் விசுவாசம். மதம் சார்ந்த என்னுடைய நம்பிக்கைகளோ அப்போது வேறு மாதிரி இருந்தன. உங்க நம்பிக்கைகளை உங்களோட வச்சுக்கோங்க சார் என்றால் மனிதர் கேட்க மாட்டார். நல்ல விசயத்தையும் உண்மையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தாண்டா நான் இங்க வந்திருக்கேன் என்று திருப்பி அடிப்பார். வகுப்பில் எங்களுக்கு மாரல் பாடங்கள் நடத்துவது அவர்தான் என்பதால் பைபிளில் இருந்து கதை கதையாகச் சொல்வார். கூடவே சில ஏவுகணைகளும் வரும்.

முப்பத்து முக்கோடி தேவர்கள்னு சொல்றாங்களே.. அவங்க எல்லாம் யாரு தெரியுமா? ஆதியில கடவுள்கிட்ட நூறு கோடி தேவதைகள் இருந்தாங்க. அதுல லூசிஃபர்னு சொல்ற சாத்தான் பிரிஞ்சு வந்து போது மூணுல ஒரு பங்கு தேவதைகள் அவனோட போயிட்டாங்க. அவங்கதான் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள். புரியுதா.. அத்தனையும் பேய்டா தம்பிகளா..”

அது எப்படிறா அவரு நம்ம சாமியை எல்லாம் சாத்தான்னு சொல்லலாம் என்று பையன்கள் உள்ளுக்குள் சடைத்துக் கொண்டாலும் சார் கதை சொல்லும் அழகுக்காகவே கிளாஸ் களைகட்டும். அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களையும் எடுத்து விடுவார்.

எப்பவும் வண்டியை காம்பவுண்டுக்கு வெளில நிறுத்துவேன். நேத்தைக்கு சாயங்காலம் மனசுக்குள்ள ஒரு குரல். வேணாம் வண்டியை உள்ளே நிறுத்துன்னு. சரின்னு நானும் வண்டியை வீட்டுக்கு உள்ள நிறுத்திட்டேன். காலைல எழுந்து பார்த்தா காம்பவுண்ட்ல இருந்த அத்தனை வீட்டுலயும் வண்டி திருட்டு போயிருக்கு. நம்ம வண்டி மட்டும் தப்பிச்சிருச்சு. எல்லாம் கடவுளோட கிருபைதான்ப்பா”.

அது எப்படி சார் உங்க ஒருத்தருக்கு மட்டும் உதவிட்டு தான் படைச்ச மத்த எல்லாரையும் அவதிப்பட வைக்கிறவரு நல்ல சாமியா இருக்க முடியும்?” குனிந்து கொண்டு ஆனந்தகிருஷ்ணன் கத்துவான்.

யாருடா அந்த லூசுப்பய.. ஏசுவையே சந்தேகப்படுறதுஎனக் கோபப்படுவார். ஆனால் அதெல்லாம் சில நிமிசம்தான். பிறகு மீண்டும் சாந்தசொரூபியாக மாறி கதையைத் தொடர ஆரம்பித்து விடுவார். கிளாசுக்கு வெளியே முற்றிலும் வேறொரு நபராக மாறி அனைவருக்கும் நெருக்கமான மனிதராக இருப்பார்.

பள்ளி முடியும் தினம். ஆசிரியர்கள் சார்பில் எங்கள் அனைவருக்கும் ஃபேர்வெல் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு முடிந்து ஒவ்வொருவர் பற்றியும் குருராஜ் சார் பேசிக்கொண்டே வந்தார். கடைசியாக என்னைப் பற்றி அவர் சொன்னதுதான் அன்றைய ஹைலைட்.

நேற்றைக்கு இரவு கிறிஸ்துவோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார். கண்டிப்பாக ஒருநாள் கார்த்தி உண்மையானதொரு கிருஸ்துவனாக மாறுவான்..” கிளாசே கொல்லென்று சிரித்து விட்டது.

மனிதர் அசையாமல் மீண்டும் சொன்னார். “எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் ரொம்ப நல்லவன். உண்மையை உணர்ந்து அவன் ஒருநாள் கண்டிப்பா கடவுளை ஏத்துக்குவான்”.

பள்ளி முடித்த பின்பாக கல்லூரி, வேலை என்று சில பல வருடங்களாக சாரைப் பார்க்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு திடீரென்றுதான் அது தோன்றியது. நாம் படித்த பள்ளிக்குப் போய்ப் பார்த்தால் என்ன? கிளம்பிப் போனேன். பள்ளி நிறையவே மாறி இருந்தது. பிரைமரி ஸ்கூல் தனியாகவும் மேல்நிலை வகுப்புகள் தனியாகவும் என்று பிரித்திருந்தார்கள்.

பிரைமரி ஸ்கூலின் ஹெட் மாஸ்டராக குருராஜ் சார். அவருக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. இன்னார் என்று சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டார். நானும் ஆசிரியராகத்தான் இருக்கிறேன் என்றதும் மனிதருக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து வந்து கட்டிக் கொண்டார். நிறைய நேரம் மகிழ்ச்சியாக அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினேன். வெளியேறும்போது தயங்கியபடிக் கேட்டார்.

இப்பவாவது கடவுளை ஏத்துக்கிட்டியாடா..”

சிரித்தபடி சொன்னேன். “இல்லை சார். முந்தி ஏசு கடவுள் இல்லைன்னு உங்கக்கிட்ட வம்பு வளர்ப்பேன். இப்பவெல்லாம் கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

அடப்பாவி.. நீ மாறுவ. கண்டிப்பா ஏசு உன்னை ரட்சிப்பார்”. சிரித்தபடி இதைச் சொன்னபோது அவர் கண்களில் பல வருடங்கள் முன்பாகப் பார்த்த அதே நம்பிக்கையும் கருணையும். இன்னுமா இந்த உலகம் என்னைய நம்புது?

ருணாச்சலக் கவிராயர் - சிறுகுறிப்பு வரைக

இவர் தமிழின் புகழ்பெற்றக் கவிஞர். சிவபெருமானைப் பார்த்து அதாண்டா இதாண்டா அருணாச்சலம் இவந்தாண்டா எனப் பாடியதால் இந்தப் பெயர் பெற்றார்

பரிட்சையில் இப்படி எழுதி வைத்தால் எந்த ஆசிரியருக்காவது கோபம் வராமல் இருக்குமா? எல்லாருமே கொந்தளித்து விடுவார்கள், ஒரே ஒருவரைத் தவிர. அவர் கஜேந்திரன் சார். எட்டாவது முதல் பனிரெண்டாப்பு வரைக்கும் எனக்குத் தமிழ் சொல்லித்தந்த மகாத்மா. அவர் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நான் அவருக்கு ரொம்ப நெருக்கமானவனாக ஆகி விட்டிருந்தேன்.

அப்போதெல்லாம் பணம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்க முடியாத சூழலில் எனது வீடு இருந்தது. கஜா சாருக்கு இது தெரியும் என்பதால் பள்ளி முடிந்ததும் அவரது வீட்டுக்கு என்னையும் கூட்டிக் கொண்டு போவார். அவர் வீட்டில் எல்லாப் பத்திரிக்கைகளும் வாங்குவார்கள் என்பதால் அங்கேயே அமர்ந்து எல்லாவற்றையும் வாசித்த பின்பு கிளம்புவேன். பள்ளிக்கான புத்தகங்களையும் தன் செலவில் அவரே வாங்கிக் கொடுப்பார். ஆக மொத்தம் வகுப்பில் அவருடைய செல்லப்பிள்ளை நான். அதனாலேயே வகுப்புக்குள் எனக்கு கஜா சாரின் ஒற்றன் என்கிற பட்டப்பெயர் கூட இருந்தது.

கஜா சார் பாடம் நடத்தும் அழகே தனி. சினிமா மீது அவருக்கு இருந்த பிரியம் அலாதியானது. பைத்தியம் என்று கூட சொல்லலாம். ஆகவே அவர் எல்லாவற்றுக்கும் சினிமாவில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு சொல்லுவார். பாஞ்சாலி சபதம் பற்றிப் பாடமா? கிருஷ்ணன் பற்றி சொல்ல வேண்டுமா? அவருக்கு உடனே என்.டி.ராமாராவ் ஞாபகம் வந்துவிடும். கட்டபொம்மன் பற்றிய வரலாற்றுப் பாடமா? சிவாஜியைப் போல உறுமிக் கொண்டே மொத்த வசனத்தையும் பேசிக் காட்டுவார். மொத்தத்தில் அவர் கிளாசுக்குள் இருந்தால் நேரம் போவதேத் தெரியாது.

நான் +2 முடிக்கிற நிலையில் இருந்தபோது சாருக்குத் தூத்துக்குடிக்கு மாற்றல் ஆனது. அவர் கிளம்பிப் போனபோதுதான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஆசிரியருக்காக நான் அழுதது. இப்போது சார் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் மீதான எனது ஆர்வத்தைக் கண்டறிந்து என்னை உற்சாகப்படுத்திய கஜா சாரை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

தீபாவளிப் பாண்டியன் பொங்கல் பாண்டியன் எனக் கிண்டல் செய்தபடி இருக்கும் சுந்தர்சிங் ஹெட்மாஸ்டர், மவுன கீதங்கள் சரிதாவை ஞாபகப்படுத்தும் மாரியம்மாள் மிஸ், உங்க பையன் பெரிய ரவுடியா ஸ்ட்ரைக் எல்லாம் பண்ணுவானா என்று என் அம்மாவிடம் முறைத்த வில்சன் சார், கணக்கு சரியாகப் போடாவிட்டால் கையின் ஆடுசதையைப் பிடித்துக் கிள்ளி வைக்கும் முத்துசிதம்பரம் சார், ரோட்டில் அடிபட்டுக் கிடந்த பிள்ளைக்கு ரத்ததானம் செய்து விட்டு லேட்டாக ஸ்கூலுக்கு வர நீ நல்ல மனுசனா வருவடா என்று தோள் சாய்த்து அணைத்துக் கொண்ட விஜயகுமார் சார், படம் சரியாக வரையாமல் வந்த ராம்பிரசாத்தை ஏதோ எடக்காக கேள்வி கேட்டான் என்று நிஜமாகவே எத்தி ஃபுட்பால் ஆடி மாணவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த மணிமாறன் சார் (என் வாழ்வில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் போன ஒரே மனிதர்), அர்த்தமே இல்லாமல் என்னை அடித்தார் என்பதற்காக நண்பர்களோடு சேர்ந்து பெரியாரில் வைத்து நாங்கள் அடி பொளந்த சுரேஷ் சார் (எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என இன்றைக்கும் நான் அதற்காக வருந்துவதுண்டு).. எத்தனை எத்தனை மனிதர்கள் ஞாபகத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பள்ளியில் இருந்த மாதிரி நான் கல்லூரியில் ஆசிரியர்களோடு நெருக்கமாக இருந்தது இல்லை. மிஸ் என்பது இல்லாமல் போய் மேடம் எனச் சொல்வதே சங்கடமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதே போலவே சார்களும் முடிந்த அளவு மாணவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள் என்பதால் பெரிய அளவில் யாரோடும் பழக்கம் இருந்தது கிடையாது. ஆனால் கல்லூரி காலத்தில் ஒரு ஆசிரியையோடு நடந்த மோதல் காலம் முழுதும் என்னைத் துரத்தும் என்பது மட்டும் எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

ந்த மேடமின் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் “டெட்பாடி”. பாடம் நடத்தினாலும் சரி, சிரித்தாலும் சரி, கோபப்பட்டாலும் சரி.. எல்லாவற்றுக்குமே முகத்தில் ஒரே உணர்ச்சிதான். உம்மென்று இருப்பார். எனவே அவர் பெயர் செல்லமாக டெட்பாடி.

ஐந்தாவது செமெஸ்டரில் எனக்கு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அவர்தான் எடுத்தார். அந்த செமஸ்டர் முழுக்க கலை நிகழ்வுகளைச் சாக்காக வைத்து நான் வகுப்புக்கே போகவில்லை. வகுப்புக்கள் முடிய ஒரு வாரம் இருக்கும்போதுதான் முதல் முறையாக நம் டெட்பாடியின் கிளாசில் போய் அமர்ந்தேன். உள்ளே நுழைந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்.

“தம்பி, இது இன்ஸ்ட்ருமெண்டேசன் கிளாசுப்பா..”

“தெரியும் மேடம். நானும் இந்த கிளாஸ் தான்..”

“அப்படியா. நான் உன்னை இங்க பார்த்ததே இல்லையே? எங்க உன் நோட்டை எடு பார்க்கலாம்..”

உக்கும். முதல் நாள் அன்றுதான் கிளாசுக்கே வருகிறேன். இதில் எந்த நோட்டுக்குப் போக? அமைதியாக எழுந்து நின்றேன். நீயெல்லாம் என்ன டாஷுக்குப் படிக்க வருகிறாய் என்கிற ரீதியில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் திட்டி திட்டிக் களைத்துப் போனவர் வகுப்பை விட்டு வெளியே போகும்படி சொன்னார். நான் அசராமல் உள்ளேயே நின்றிருந்தேன். வெறுத்துப் போய் நெருங்கி வந்தவர் என்னிடம் தீர்க்கமாகச் சொன்னார்.

“என்ன திமிரா? என் கையில் இருபது மார்க் இண்டர்னல் இருக்கு தெரியும்ல?”

என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் திருப்பிச் சொன்னேன். “தெரியும் மேடம். அதே நேரம் என் கையில் எம்பது மார்க் எக்ஸ்டர்னல் மார்க் இருக்கு. நான் எழுதி பாஸ் ஆகிக்குறேன்” சொல்லி முடித்த கையோடு வகுப்பை விட்டு வெளியேறினேன்.

பிறகு அவர் துறைத்தலைவரிடம் போய் புகார் சொன்னதும் என்மீது பிரியம் கொண்ட துறைத்தலைவர் அவன் நல்ல பையன் படிச்சுடுவான் ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் என எனக்காக்ப் பரிந்து பேசி காப்பாற்றி விட்டதும் வரலாறு. அன்றைக்கு பிரச்சினை ஓய்ந்து வெளியே வரும்போது டெட்பாடி என்னிடம் சொன்னது. “வாத்தியார மதிக்காத நீயெல்லாம் நல்லாவா இருக்கப் போற. கண்டிப்பா இதுக்காக வருத்தப்படுவ..”

சரி. இதை எல்லாம் நான் ஏன் இப்போது சொல்ல வேண்டும்? கடந்த பத்து வருடமாக நான் வாத்தியாராகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நான் எடுக்கும் பாடங்களில் கட்டாயமான ஒன்றாக இருப்பது - கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மட்டுமே. சும்மாவா சொன்னார்கள்? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

March 31, 2012

3 - திரைப்பார்வை

இழவு வீட்டில் ஆரம்பிக்கும் முதல் காட்சி. குடிமக்கள் புடைசூழ பாரில் நடைபெறும் நாயகன் நாயகி திருமணம். வி நெக்கும் த்ரீ ஃபோர்த்தும் அணிந்து முதலிரவில் நளினமாய் நடைபயிலும் நாயகி. காதலர்கள் இருவரும் மேற்கத்திய உடையில் ஷாம்பெயன் அருந்தி தங்கள் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு. ஆனால், அவனுக்கு சின்ன வயது பாதிப்பு அல்லது அம்மா மீதான அதீத அன்பு என்று க்ளிஷேவாக காரணங்கள் ஏதுமில்லாமல், மனநோய். அவ்வளவே. இப்படியாக தமிழ் மரபு அல்லது நம்பிக்கைகள் என்பதாகச் சொல்லப்படும் பல விசயங்களை விலக்கி வைக்கும் படமாக வெளியாகி இருக்கிறது ஐஸ்வர்யா ஆர் தனுசின் “3”.



தனுஷ் - அவருக்குள் இருக்கும் இன்னொரு தனுஷ் - ஸ்ருதி - 3. தனுஷ் ஸ்ருதி பள்ளிக்காதல் - அவர்கள் திருமணம் - அதன் பின்பான வாழ்க்கை - 3. தனுஷ் - ஸ்ருதி - ஐஸ்வர்யா - 3. தனுஷ் ஸ்ருதி - ஐஸ்வர்யா - செல்வராகவன் - 3. அடப்போங்கப்போ. ஏதோ ஒரு வகையில 3. பள்ளிக்காலத்தில் சந்திக்கும் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்குப் பின் வீட்டை எதிர்த்து திருமணம். நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்வில் இடைவேளைக்குப் பிறகு பிரச்சினை. தனுசுக்கு மனநோய். மனைவிக்குத் தெரியாமல் அதிலிருந்து தப்ப முயல்கிறார். ஆனால் அது இயலாது தோற்கிறார். கடைசியில் அவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

பழைய படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். பெரிய குடும்பத்தின் தலைவர் என்றால் ரங்காராவ், பண்ணையார் என்றால் மனோகர், கிருஷ்ணர் என்றால் ராமாராவ். அதுப்போல இப்போதைய படங்களில் சைக்கோ என்றால் கூப்புடுறா தனுசை என்கிறார்கள். ஏன்யா, இப்பத்தானய்யா மயக்கம் என்ன வந்துச்சு? கந்தசாமி பார்க்கும்போது வந்த மிகப்பெரிய சந்தேகம் அது எப்படி இந்தாளு தான் நடிச்ச அந்நியன் படத்தையே ரீமேக் பண்ண ஒத்துக்கிட்டாருன்னு. இப்போ அது போயிருச்சு. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க. ஆனா தான் எப்படிப்பட்ட நடிகர்னு கிளைமாக்ஸ் சீன்ல காட்டுறாரு பாருங்க.. அதுதான் தனுஷ். பள்ளிப்பருவ உடல்மொழியும் இரண்டாம் பாதியில் அதற்கு அப்படியே எதிராக மாறும் மனநோய் கொண்டவரும் என பிரித்து மேய்கிறார்.



ஸ்ருதிக்கு இதுதான் முதல் படமாக வந்திருக்க வேண்டும். ஸ்கூல் யூனிஃபார்மில் அத்தனை அழகு. கெச்சலான அவரது உடம்பும் நிமிசத்துக்கு நிமிசம் மாறும் முகபாவனைகளும் அசர அடிக்கின்றன. சொல்லப்போனால் முதல் பாதியின் நாயகன் ஸ்ருதிதான். மாடியில் தனுசின் கையை இன்னும் ஒரு நிமிடம் பிடித்துக் கொள்ளட்டுமா எனும்போதும் முதலிரவில் கணவன் மடியில் அமர்ந்து உறவாடும்போதும் நெஞ்சை அள்ளுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுதும் அவரை அழ வைத்தே காலி செய்கிறார்கள். படத்தில் கவனம் ஈர்க்கும் இன்னொரு மனிதர் சிவகார்த்திகேயன். அவரை ஸ்கூல் பையன் எனச் சொல்வது காமெடியாக இருந்தாலும் தனது ஒன் லைனர்களால் வெளுத்து வாங்குகிறார். இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் யூ நோ.

படத்தின் முன்பாக தைரியமாக “ எ அநிருத் ம்யூசிக்கல்” என்று போடலாம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். குறிப்பாக தீம் ம்யூசிக்கைக் கொண்டு போய் தனுசின் சண்டையில் சேர்த்த விதம் அழகு. பாடல்களைப் படமாக்கியதில் கண்ணழகாவும் இதழின் ஒரு ஓரமும் டாப். எதிர்பார்த்ததைப் போலவே கொலவெறியை படு கேவலமாகப் படமாக்கி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாட்டு பூராவும் விளம்பரங்கள் இருந்தது பெரிய எரிச்சல். ஒளிப்பதிவாளருக்கு முதல் பாதியில் நல்ல வாய்ப்பு. தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அதைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.



அருமையான காதல், நல்ல நடிகர்கள். அட்டகாசமான இசை என எல்லாம் இருந்தும் இந்தப்படத்தை நல்ல படம் எனச் சொல்ல முடியாமல் போனதற்குக் காரணம் இயக்குனர் ஐஸ்வர்யா. சமீபத்தைய எல்லாப் படங்களையும் போல இதிலும் இரண்டு கதைகள். முதல் பாதி காதல் கதை. இரண்டாம் பாதி சைக்கோ கதை. இரண்டும் ஒட்டவே இல்லை. கணவனின் மேல் அத்தனை பிரியம் கொண்ட பெண் அவனுள் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடிக்காமலா இருப்பாள்? தன் நிலை இத்தனை மோசம் என்று தெரிந்தும் ஏன் தனுஷ் மருத்துவம் செய்து கொள்ள மறுக்கிறார்? நண்பன் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்தும் சுந்தர் ஏன் விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்? சுத்தமாக லாஜிக் இல்லாத நிலையில் படம் பார்ப்பவரைப் பெரிதும் சோர்வடையச் செய்கிறது. என்னைக் கேட்டால் முதல் பாதியோடு கூட படத்தை முடித்து மக்களைச் சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம். அதுவே மூன்று மணி நேரம் படம் பார்த்த உணர்வைத்தான் தந்தது. நன்றாக இருந்தாலும் அத்தனை நீளம். இதில் இரண்டாம் பாதி சைக்கோ என்றதில் பார்ப்பவர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

படம் முடிந்தபின்னும் எனக்குக் குழப்பமாக இருந்தது. படம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் முழுவதும் பிடித்ததா என்றால் அதுவும் இல்லை. அடுத்த படத்தில் திரைக்கதையைச் சரியாக அமைப்பதின் மூலம் இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஏற்படாமல் இருக்க ஐஸ்வர்யா அருள் புரிவாராக. ஆமேன்.

3 - குழப்பம்.

March 28, 2012

உதிரிப்பூக்கள் - 9

சி நாட்களுக்கு முன்பு ஒரு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை போக வேண்டியிருந்தது. பரங்கிமலையில் இருக்கும் நண்பரொருவனின் அறையில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அதிகாலை ரயிலில் நான் போய் இறங்கியபோது நண்பன் கிளம்பி வேலைக்குப் போய் விட்டிருந்தான். தனது அறையில் இருக்கும் நண்பர் என்னை கவனித்துக் கொள்வார் என்பதாகச் சொல்லி முகவரியையும் குறுந்தகவலாக அனுப்பி இருந்தான். அப்படி இப்படியென்று அலைந்து திரிந்து அந்த முகவரியைக் கண்டுபிடித்தேன்.

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. நண்பனின் வீடு இருந்தது முதல் தளத்தில். மேலே ஏறிப் போனால் ஒரே தளத்தில் எதிரெதிராக இரண்டு வீடுகள். எண் எதுவும் சுவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் எது நண்பன் வீடெனத் தெரியாமல் குருட்டாம்போக்கில் ஒரு வீட்டின் மணியை அடித்து வைத்தேன். சற்று நேரத்துக்குப் பின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வந்தார். முப்பது வயதிருக்கலாம். வெகு அமைதியான குரலில் யார் வேண்டுமென கேட்டவரிடம் என் நண்பனின் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் யோசித்துவிட்டு அப்படி யாரையும் தெரியாதெனச் சொல்லிவிட்டு சின்னதொரு சிரிப்போடு உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டார். ஆக எதிர்த்தாற்போல இருக்கும் வீடுதான் நண்பனின் வீடு என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

அன்றைக்கு முழுவதும் எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. எதிர்த்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? இது மாதிரியான அனுபவங்கள் எல்லாம் எத்தனையோ முறை கதைகளில் பத்திரிக்கைகளில் டிவிக்களில் எல்லாம் பேசப்பட்டு நமக்கு நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான். ஆனால் எனக்கு நேரடியாக நடப்பது இதுதான் முதல் தடவை. நகரங்களில் என்று தானில்லை. கிராமம் நகரம் என எல்லாப்பக்கமும் இதுதான் மறுக்கமுடியாத நிதர்சனம். பொதுவாகவே இன்றைக்கு சக மனிதர்கள் மீதான அக்கறை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

சாயங்காலம் வந்த நண்பனிடம் நடந்ததைச் சொன்னேன். அவன் “ஓ எதுத்த வீட்டுல குடி வந்துட்டாங்களா” என்று என்னிடமே ஆச்சரியமாகத் திரும்பிக் கேட்டான். வெளங்கிடும். “எப்படிடா மனுசனுக்கு மனுசன் பழகிக்காம இருக்கீங்க.. ஆத்திரம் அவசரம்னா என்னடா செய்வீங்க” என்கிற என் கேள்வியை வெகு சாதாரணமாக அவனால் கடந்து போக முடிந்தது. “அதெல்லாம் நடக்குறப்போ பார்த்துக்கலாம். மக்க மனுசாளை தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. காசு பணம் இருந்தா போதும் மச்சி. எல்லாம் தானா நடக்கும் ”

ஆகக் கடைசியில் எல்லாம் இங்கேதான் வந்து முடிய வேண்டுமா? பணம்தான் வாழ்க்கையில் பிரதானம் என்பது மட்டும்தான் உண்மையா? அன்பு நேசம் சக மனிதன் மீதான அக்கறை என்பதாகச் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் காலத்தில் கரைந்து போய் விட்டனவா? உண்மையில் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்பதான கேள்விகளை நான் எனக்குள் மீண்டும் ஒரு தரம் கேட்டுப் பார்க்கிறேன்.

வாழ்க்கை மீதான என் கண்ணோட்டத்தை மொத்தமாக மாற்றியவர் எஸ்.ராமகிருஷ்ணன். நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்ததில் அவருடைய எழுத்துக்குப் பெரும்பங்கு உண்டு. ஏன் நம்மால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்கிற கேள்வியை எனக்குள் விதைத்து இதுமாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. நான் வாசித்த எஸ்ராவின் முதல் எழுத்து விகடனில் வெளியான துணையெழுத்து தான். அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தேன். இப்போதும் அந்த பத்தி மிக நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அன்பின் விதைகள்.

எஸ்ரா வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூட காவல்காரர் ஒருநாள் ஐம்பது ரூபாய்க்கு மணியார்டர் எடுத்துக் கொண்டு வந்திருப்பார். யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்று விசாரிக்கும் எஸ்ராவுக்கு அவர் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும் உதவி தேவை எனும் விளம்பரம் ஒன்றைக் காட்டுவார். “நம்மள மாதிரி மனுசங்க உதவுவாங்கன்னுதான சார் விளம்பரம் கொடுக்குறாங்க” என்கிற அவரது வார்த்தைகள் எஸ்ராவுக்குள் ஏன் இது ந்மக்குத் தோன்றவில்லை என்கிற தீராத குற்றவுணர்வை உண்டாக்கி விடும்.

அதற்கு சில நாட்களுக்குப் பின்பு அந்த காவலரைத் தேடி ஒரு பெண்ணும் சிறுமியும் கிளம்பி வருவார்கள். அது அந்த உதவி கேட்ட மனிதரின் மனைவியும் பிள்ளையும். அவர் நல்லபடியாக சுகமாகி இருக்க அவருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்வதற்காக அவர்கள் கிளம்பி வந்து இருப்பார்கள். இந்த மாதிரியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதாக எஸ்ரா வியந்து சொல்வதோடு அந்த பத்தி முடியும்.

இதனைப் படித்து முடித்து விட்டு இரண்டு நாட்கள் அழுதபடி இருந்தேன். என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போட்ட தருணம் அது. ஏன் இது மாதிரி எல்லாம் எனக்குத் தோன்ற வில்லை, இதுநாள் வரை நான் என்ன மாதிரியாக வாழ்ந்திருக்கிறேன் என்றெல்லாம் அந்த எழுத்துகள் என்னை சுயவிசாரணை செய்து கொள்ள வைத்தது. வாழ்க்கையில் நாம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதான எண்ணங்களை எல்லாம் எனக்குள் விதைத்ததும் அந்தக்காலம்தான். பணத்தின் பின்னால் ஓடுவதைக் காட்டிலும் அன்பு செய்யும் மனிதர்களை சம்பாதித்தால் போதும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.

அந்த எழுத்துகள் உண்மையோ பொய்யோ, அது மாதிரியாக மனிதர்கள் சாத்தியமா இல்லையா என்பதை மீறி என்னை மிகவும் பாதித்தது துணையெழுத்தின் அந்தக் கட்டுரை. ஆனால், அன்பின் விதைகளில் பார்த்தது போல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சக மனிதனுக்கு உதவி செய்தால் போதும் என்கிற நல்ல மனம் கொண்ட மனிதர்களை என் வாழ்வில் நான் சந்திப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

டிசம்பர் 2006. நான் கொங்கு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த நேரம். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரி நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஏதேனும் அவசரத் தேவைக்கு டவுனுக்கு போக வேண்டுமானால் நேரத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது. கேன்டீன் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எல்லாவற்றையும் உத்தேசித்து மதுரையில் இருந்து பைக்கை கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

வெகு தூரத்துக்கு வண்டியில் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு வண்டியை ஓட்டிப்போக முடிவு செய்தேன். அன்று கிறிஸ்துமஸ் தினம். லீவுக்கு மதுரையில் இருந்தேன். பைக்கை மத்தியான ட்ரைனுக்கு புக் செய்து விட்டதாகவும், அதே ட்ரைனில் நானும் போக இருப்பதாகவும் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். இறங்கின இடம் மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.

எனக்கு நினைவு திரும்பிய போது என் முகத்தின் வெகு அருகே குனிந்து நின்ற மனிதர் ஒருவரைப் பார்த்தேன். வயதானவர். "தம்பி.. தம்பி.. எந்திரிப்பா.." என அவர் தான் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கலவரத்தை மீறி ஒரு கருணை இருந்தது. நான் எழுந்து கொள்ள முயன்றேன். முடியவில்லை. வலது காலை நகர்த்த முடியாத அளவுக்கு வலி. அவர் என் கைகளை தனது தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை மெதுவாக எழுப்பினார். வயல் வேலை பார்ப்பவர் போல. அவருடைய உடையில் இருந்த சேறு என் மீதும் அப்பிக் கொண்டது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வண்டி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தது.

"வண்டிக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.. அப்படி ஓரமா நிக்கட்டும். விடுங்க தம்பி.. ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோஷப்படுங்க" பேசியவாறே நடந்தார். அருகில் இருந்த சரிவில் பத்தடி தூரம் நடந்து அவருடைய வீட்டை அடைந்தோம். காரை வீடு. எளிமையாக இருந்தது. அடிபட்டு வந்த என்னைப் பார்த்து அவருடைய மனைவி பதைபதைத்துப் போனார். என்னைத் திண்ணையில் அமரவைத்து காலை சுத்தம் செய்தார். முட்டியில் பெரிய அளவில் வெட்டுக்காயம் இருந்தது. கண்டிப்பாகத் தையல் போட வேண்டி இருக்கும். வேறு எங்கும் பெரிய அளவில் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். "கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி.. என் மகன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. பிறகு டாக்டர்கிட்ட போகலாம்.." அந்த அம்மா சொன்னார்.

அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்.

என் கால் சரியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. கல்லூரியிலேயே இருந்தேன். ஊருக்குப் போகவில்லை. கால் சரியாகி ஊருக்குப் போன பிறகுதான் அம்மாவிடம் கூட உண்மையைச் சொன்னேன். அம்மா அவர்களைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துக் கொண்டு போனேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் யார் இவர்களுக்கு? முன்பின் தெரியாத ஒருவன் மேல் எதற்காக இவர்கள் இத்தனை அக்கறை காட்ட வேண்டும்? என்னுடைய நன்றியைத் தெரிவித்தபோது அந்தப் பெரியவர் சொன்னார்.. "கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." அன்பின் விதைகளில் நான் வாசித்த மனிதர்கள் என் முன்பாக உயிருடன் அங்கே நின்றிருந்தார்கள்.

வெகு சமீபமாகத் தான் சந்தியாவை எனக்குத் தெரியும். சிவகங்கை தாண்டி இருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிறார். அப்பா கிடையாது. அவருடைய மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம். இருந்தும், சாயங்காலம் தோறும் ட்யூசன் எடுத்துக் கிடைக்கும் பணத்தை, மாதமானவுடன் அருகிலிருக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காலை நேர வாக்கிங் வரும் மனிதர்களுக்கு அவரை நன்கு அடையாளம் தெரிந்திருக்கலாம். அந்தப் பகுதியில் பறந்து திரியும் காக்கைகளுக்கு வேண்டுமட்டும் பன் வாங்கி பிய்த்துப் போடுவதை தினமும் தனது கடமையென செய்து கொண்டிருக்கும் அந்த மனிதர் பற்றி என்ன சொல்வது? ஹைதராபாத் பயணத்தில் பர்சைத் தொலைத்து நின்றபோது என்ன ஏதென்று விசாரித்து பணம் கொடுத்து உதவிய பெயர் தெரியாத முதியவர், மதுரையின் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பிறழ்ந்தோரைப் பாதுகாப்பதே தன் வாழ்வின் கடமையெனச் சொல்லும் பெயர் சொல்ல விரும்பாத நண்பர், வேலை விட்டு வந்த பின்பாக சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தன் நேரங்களை செலவிடும் குமார் எனக் காலம் தொடர்ச்சியாக சில அற்புதமான மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறது.

லைப்பூவில் எழுதத் தொடங்கியபின்பு அறிமுகம் ஆன நண்பர் அவர். மலேசியாவில் இருக்கிறார். இங்கிருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் நண்பா எனச் சொல்லி மாதாமாதம் இரண்டாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார். வெகு நாட்களுக்குப் பின்பு ஒருநாள் ஏதோ தோன்ற அவரிடம் கேட்டேன்.

“மலேசியாவுல என்ன வேலை பாக்குறீங்க தல..”

“கூலி வேலைதான் நண்பா. தினமும் பாக்குற வேலைக்குத் தகுந்தா மாதிரிச் சம்பளம்...”

நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது என்று சொல்லுவார்கள். எனக்குப் பொதுவாக அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், இது மாதிரியான மனிதர்களைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசையாய் இருக்கிறது.

March 12, 2012

பெண்மை போற்றுவோம் - "என் விகடன்" பதிவு

(மகளிர் தினத்தை ஒட்டி போன வாரம் ஆனந்த விகடன் - என் விகடன் மதுரை பதிப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்..)

நான் எதற்கும் அஞ்சவில்லை. மாறாக, இதற்கெனவே நான் பிறந்ததாக உணர்கிறேன் - ஜோன் ஆஃப் ஆர்க்

என் வாழ்க்கை பெண்களால் ஆனது. சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே பெரும்பாலும் வளர்ந்துள்ளேன். பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல, நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட அம்மா, வறுமையில் எனக்கான ஸ்கூல் ஃபீஸைக் கட்டிய மாட் மிஸ், எப்போதும் தோள் சாய்ந்து அழும் பால்ய சினேகிதி மீனாட்சி, வாழக் கற்றுத்தந்த தோழி சரோ.. எத்தனை எத்தனை பெண்கள். நான் இன்றிருக்கும் நானாய் இருப்பதில் இவர்கள் எல்லாருக்குமே பங்குண்டு.

உடைந்து போகும் தருணங்களில் எல்லாம் நான் சாய்ந்து கொள்ளும் தோள்களாகப் பெண்களே இருந்திருக்கிறார்கள். அது மாதிரியான சமயங்களில் நம்பிக்கை எனும் வார்த்தைக்கு அர்த்தமாக நான் அடையாளம் காணும் இரண்டு பெண்களைப் பற்றி இங்கே பேச ஆசைப்படுகிறேன். அதில் முதலாவதாக என்னுடைய மிக நெருங்கிய தோழியான சக்தி.

கடலூர் தான் சக்தியின் சொந்த ஊர். அவளை முதன்முதலில் அவள் அப்பா இறந்த வீட்டில்தான் பார்த்தேன். மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் அப்பா திடீரென ஒரு இரவில் நெஞ்சு வலியில் இறந்து போனார். இரண்டு பெண் பிள்ளைகளில் சக்திதான் இளையவள். தெரிந்தவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பக் கூட ஆளில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குடும்பமே தவித்த நிலையில் வீட்டின் பொறுப்பை சக்தி ஏற்றுக் கொண்டாள். “எங்க அப்பாவுக்கு பையன் இல்லையேன்னு என்னைக்கும் குறை இருந்ததே இல்லை. நாந்தான் அவருக்கு பொண்ணு பையன் எல்லாமே..” நண்பர்களை உதவிக்கு அழைத்து நிலைமையைச் சொன்னாள். அந்த சங்கடமான நேரத்தில்தான் மற்றொரு நண்பர் மூலம் எனக்கும் அவளுக்குமான அறிமுகம் நடந்தது.

உறவினர்களுக்கு சொல்லியனுப்பவதில் ஆரம்பித்து கடைசி காரியம் வரை எல்லாவற்றையும் முன்னின்று அவளே செய்து முடித்தாள். எல்லாரையும் எதிர்த்துத் தன் அப்பாவுக்கு தானே கொள்ளி வைக்கும் தைரியமும் அவளுக்கு இருந்தது. காரியம் முடிந்து வந்தபோது உறவினர் யாரையும் காணவில்லை. ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் பொறுப்பு தங்கள் மீது வந்து விடுமோ என்கிற பயம். கலங்கி நின்ற அம்மாவுக்கு அப்போதும் ஆறுதலாக இருந்தது சக்திதான். அலைந்து திரிந்து அப்பாவின் வேலையை அக்காவுக்கு வாங்கிக் கொடுத்தாள். அடுத்ததாக லோன் வாங்கிக் கட்டிய வீட்டின் மீதான கடன் அவர்களைத் துரத்தியது. சக்தி பயப்படவில்லை. தமிழ்நாட்டின் தலைநகருக்கு வண்டி ஏறினாள். ஆறு மாத காலம் நாயாய் அலைந்து திரிய பேங்க் ஒன்றில் வேலை கிடைத்தது. கடுமையான உழைப்பு. இரண்டே வருடத்தில் வீட்டின் மீதான கடனை அடைத்தவள் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள்.

இன்றைக்கு சக்தி சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அம்மாவோடு நிம்மதியாக வாழ்கிறாள். புதுவீடு புகும் நிகழ்வன்று சக்தியின் அம்மா அழுதபடிக்கு சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. “அவர் போனதோட என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன். ரொம்பப் பெருமையா இருக்குடி..”

எதிர்பாராத நிமிடமொன்றில் தோன்றும் தடைகளைப் புன்னகையோடு கடந்து செல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தவள் சக்திதான். இடைப்பட்ட காலத்தில் அவளுடைய எல்லா சுகதுக்கங்களிலும் உடனிருக்கும் ஆகச்சிறந்த தோழனாக நான் மாறியிருந்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் சக்தி என்னோடு பேசும் நேரங்களில் மட்டும் இலகுவாக மனம் விட்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தோழி ஒருவர் அவளிடம் கேட்டிருக்கிறார்.

“ஏம்ப்பா.. அவந்தான் உன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டவனா இருக்கான்ல. அவனோட பேசும்போதுதான் நீயும் சந்தோசமா இருக்க. அப்புறம் ஏன் அவனக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..?”

ஒரு நிமிடம் யோசித்தவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொல்லி இருக்கிறாள்.

“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவனும் எனக்கு அப்பா மாதிரித்தான்..”

ஒரு மனிதனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நட்பு என்கிற இடத்தில் இருக்கும் ஒருவனைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அன்புக்கு கைமாறாக வாழ்வுக்கும் அவள் தோழனாய் இருப்பதைவிட நான் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

சக்தியைப் போலவே நான் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் இன்னொரு மனுஷி ரம்யா அக்கா. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இணைய எழுத்துகளின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர். விதி தன் மீது வீசிய கேலிகளை எல்லாம் நம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு சிரித்தபடி எதிர்கொண்ட அற்புதமானதொரு ஜீவன்.

அவருக்குக்கு சொந்த ஊர் ஹைதராபாத். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு பாம்பே போயிருக்கிறார். அங்கே காபி போடலாமென்று பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைக்கப் போய் அது வெடித்து உடம்பெல்லாம் தீக்காயம். முகம் மொத்தமாகக் கருகி விட்டது. நாற்பத்து ஆறு நாட்கள் மருத்துவமனையில் நரக வேதனைக்குப் பிறகு அக்கா இறந்து விட்டதாக அறிவித்து போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் அங்கே யாரோ ஒரு புண்ணியவான் முழங்காலில் லேசாக துடிப்பு இருப்பதைப் பார்த்துச் சொல்ல மறுபடி வார்டுக்குக் கொண்டு வந்து பிழைக்க வைத்தார்களாம். என்னுடைய போஸ்ட்மார்ட்டம் பேட்ஜ் நம்பர் பதிமூணு தெரியுமா என அடிக்கடி ரம்யா சிரித்தபடி சொல்வது உண்டு.

உயிர் பிழைத்தாயிற்று. ஆனால் இனி? தன்னால் நார்மலான வாழ்க்கை வாழ முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முகத்தில் சர்ஜரி செய்ய வேண்டும். அதற்கு எக்கச்சக்கமாகப் பணம் வேண்டும். உறவினர்களின் உதவியை வேண்டாம் என மறுதலித்து விட்டு ரம்யாக்கா சென்னை வந்து சேர்ந்தார். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமராக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் உயர்ந்து இன்றைக்கு அந்தக் கம்பெனிக்கு ரம்யாதான் ப்ராஜெக்ட் மேனேஜர். தன் மீது அக்கறை கொண்ட கலைச்செல்வி, சுரேஷ் ஆகியோரோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். “நாம சந்தோசமா இருக்கணும். நம்மளச் சுத்தி இருக்குற மக்கள சந்தோசமா வச்சுக்கணும். முடிஞ்ச அளவுக்கு இல்லாதவங்களுக்கு உதவணும். போதாதா” என்கிற ரம்யா அக்காவின் எதிர்காலக் கனவு “ஆதரவற்ற மக்களுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும்..”

எழுத்தின் மூலமாக மட்டுமே அறிந்த ரம்யாக்காவை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. அவரைச் சந்திப்பதற்காக சென்னை போயிருந்தேன். ஆனால் அவர் வீட்டுக்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஒரு காய்ச்சல். இரண்டு நாட்களாகக் கண்களைத் திறக்கக் கூட முடியாமல் படுத்துக் கிடந்தேன். அந்த இரண்டு நாட்களும் என்னருகிலேயே இருந்து என் அம்மா இருந்திருந்தால் எப்படி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாரோ அப்படிப் பார்த்துக் கொண்டார் அக்கா. ஒரு கணத்தில் அந்த அன்பின் வேகம் தாங்காமல் பொல பொலவென அழுதுவிட்டேன். ஆதரவாய்த் தோள் சாய்த்துக் கொண்டவர் அன்பாகச் சொனார்..”இதுக்கு எல்லாமா அழுவாங்க.. அக்கா அக்கான்னு வாய் நிறையக் கூப்படுறல.. உனக்காக இது கூடச் செய்யலைன்னா நான் என்னப்பா மனுஷி..” அந்த அன்புதான் ரம்யாக்கா. ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளும் தாய்மை உண்டு என்பதை நான் உணர்ந்த கணம் அது. அன்றைய தினத்தையும் அவர் அன்பையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.

எல்லாக் கணங்களிலும் அன்பு நம்பிக்கை என ஏதோவொரு பெண் நம் நினைவுகளில் இடறிப் போகிறார். சமூகம் தனக்கான இடத்தை வழங்க மறுத்தாலும் தன் தேடலைத் தொடர்ந்தபடி உற்சாகமாகத் தன்னிருப்பை உறுதி செய்து கொள்ள முனையும் பெண்களின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்களைப் பெண்கள் உணரத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் பாரதியின் வரிகளை நினைவு கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். “மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா..” வாழ்க்கையின் எல்லாமுமாக இருக்கும் தன்னம்பிக்கைப் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.